Tuesday, November 22, 2016

காஷ்மோரா - திரைக்கதை - சில மாற்றங்கள்

    
     இது திரைவிமர்சனம் அல்ல, விமர்சனங்கள் எழுதுவதிலும் படிப்பதிலும் கூட ஆர்வம் குறைந்து விட்டது. எனினும் திரைக்கதைகள் மீது மிக ஆர்வமுண்டு சில திரைப்படங்கள் பார்க்கையில் இது இப்படி இருந்திருக்கலாம் என்று யோசனைகளை எழும். அவை சில வேளைகளில் அசலை விட மிக நன்றாக கூட அமைந்து விடுவதுண்டு.நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதுடன் அவை நின்று விடும், அவற்றை பதிவாய் இட்டு பொதுப்பார்வைக்கு வைத்தால் என்னவென்று தோன்றியது.

சமீபத்தில் காஷ்மோரா திரைப்படம் பார்த்தேன், அதன் ப்ளாஷ்பேக் திரைக்கதை இவ்வாறு மாற்றியமைக்கப் பட்டிருக்கலாம் என சில யோசனைகள் தோன்றியது. அதை முதல் முயற்சியாக எழுதி பார்க்கலாம் என துணிந்துவிட்டேன்.  திரைக்கதை வடிவிலேயே எழுதினால் வாசிப்பதற்கு சற்று சோர்வாக இருக்குமென கதைக்கும் திரைக்கதைக்கும் இடைப்பட்ட வடிவில் முயன்றிருக்கிறேன். காஷ்மோரா பார்த்தவர்களினால் மட்டுமே இவ் வித்தியாசத்தை புரிந்துக் கொள்ள முடியும். படத்தின் ப்ளாஷ்பேக் கதை/காட்சிகளை மனதில் ஒருமுறை ஓட்டிப் பார்த்த பின் தொடர்ந்து படிக்கவும். கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் மிக விருப்பத்துடன் வரவேற்கப்படுகின்றன. நன்றி.



இடம்: விக்ராந்தக ராஜ்ஜியம்
காலம்: சில நூற்றாண்டுகளுக்கு முன்


வானை மறைப்பது போல பிரம்மாண்டமாக எழுந்து நின்ற அரண்மனையின் உயரமான உப்பரியில் நின்றுக்கொண்டு மன்னர் தன் தேசத்தை பார்வையிட்டபடி இருந்தார், அவர் அருகே பிரதான அமைச்சர் வந்து வணங்கினார்.

 "ஏதும் செய்தி உண்டா அமைச்சரே "

"நமது அருகிலிருக்கும் எதிரிநாட்டு படையொன்று அந்நாட்டு இளவரசன் அர்ஜுனன் தலைமையில் நம்முடன் போரிட கிளம்பி வந்துக் கொண்டிருக்கிறதாம் மன்னா"

அதை கேட்டு மன்னர் யோசிக்கலானார்.

"என்ன சிந்தனை மன்னா, நமக்கு முன் அவர்களால் சில கணங்கள் கூட தாக்கு பிடிக்க இயலாது"

"ஆம் அமைச்சரே நானும் அதை அறிவேன், அதான் குழப்பத்தை விளைவிக்கிறது. நம்மை வெல்லவே முடியாது என தெரிந்தும் நமக்கு சமபலமில்லாத போதும் எதற்கு படையெடுத்து வர வேண்டும்.. ஏதோ உள்காரணம் இருக்க வேண்டும் என தோன்றுகிறது எனக்கு"

அதைக்கேட்டு அமைச்சர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். மன்னர் கொஞ்சம் சிந்தித்து விட்டு "அடுத்து " என்றார்.

அமைச்சர் புரிந்துக் கொண்டு "நம் படைகள் தயார் நிலையில் இருக்கின்றன அரசே, மற்ற தளபதிகள் அதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். முதன்மை தளபதி ராஜ்நாயக் அவர் மாளிகையில் இருக்கிறார். தகவல் சொல்வதற்கு ஆள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்"



ராஜ்நாயக் மாளிகை, விசாலமான படுக்கையறை
இரவு


 விருந்திற்கு செல்பவன் போல நன்றாக அலங்கரித்துக் கொண்டு ராஜ்நாயக் அறை மத்தியில் நின்றிருந்தான். அவனது பணியாள் அவனருகில் வந்தான்.

"ஏன் இவ்வளவு தாமதம் " ராஜ்நாயக் கேட்டான்

"நாம் சென்ற முறை வென்ற நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மன்னரின் மனைவிகள் மொத்தம் 27 பேர், காதலிகள் 30 பேர். ஒவ்வொருவராக கொண்டு வருகிறேன் " பணியாள் பதிலளித்தான்

"முட்டாள் வானத்து நட்சத்திரங்களை மொத்தமாக பார்ப்பது தானடா அழகு, போய் மொத்தமாக கொண்டு வா" ராஜ்நாயக் கைகள் உயர்த்தி ஆணையிட்டான் . பின் அங்கு ஓரமாக நின்றிருந்தவர்களை காட்டி கேட்டான்

"அவர்களெல்லாம் யார்?

"அவர்கள் பணிப்பெண்கள்"

"பெண்களில் என்னய்யா பணிப்பெண்கள், அவர்களையும் கணக்கில் சேர்த்துக் கொள் " என கண் சிமிட்டி சிரித்தான் ராஜ்நாயக். பணியாள் சென்றதும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சிலையை கவனித்து அதை நோக்கி சென்றான்.

படிகளில் ஏறி ராஜ்நாயக் செல்கையில், பின்னாலிருந்து ஒரு குரல் வந்தது " தளபதி அது சிலை"

"இருக்கட்டும் பெண் சிலை தானே " சிரித்தான் ராஜ்நாயக்

அவன் அந்த சிலையை அணைத்து தன் கைகளில் சாய்த்து பிடித்தான். சிலை முகத்தில் ஒரு பெண் முகம் தோன்றியது. இளவரசி ரத்னமகாதேவியின் முகம் தான் அது.



போர்க்களம். மலைகளுக்கு இடையில் பரந்த வெட்டவெளிப்பரப்பு .
பகல்


எதிரிநாட்டு படைகள் அணிவகுத்து போருக்கு தயாராக நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் மத்தியில் சிறு தேரில் இளவரசன் அர்ஜுனன் நின்றுக் கொண்டிருக்கின்றான், போருக்கான வெறியுடன் எதிரே தொலைவில் வரும் ராஜ்நாயக் படையை பார்த்தபடி இருக்கிறான்.

ராஜ்நாயக் திறந்த ரதத்தில் முன்னே வர, ஏனைய தளபதிகள் அவன் பின்னேயும் அதற்கு பின் சிறு படையும் விரைந்து வருகிறது. முன்னேறி சென்றபடியே ராஜ்நாயக் திரும்பி பார்க்க, பின் வந்துக் கொண்டிருக்கும் தளபதிகளில் ஒருவன் தன் கையை பக்கவாட்டில் நீட்டுகிறான்.காலாட் படைகள் அங்கேயே நின்று கொள்கின்றன. ராஜ்நாயக் முன்னேயும் பிற தளபதிகளும் மட்டும் மிக வேகமாக முன்னேறுகின்றனர்.

உக்கிரமாக போர் நடக்கிறது. ராஜ்நாயக் மற்றும் தளபதிகள் எதிரிநாட்டு வீரர்களை அநாயசமாக வெட்டி சாய்க்கிறார்கள். ஏதிரி வீரர்கள் நூறு பேர் ராஜ்நாயக்கை சூழ்ந்து கொள்கிறார்கள், நட்சத்திர வியுகத்தில் அவனை நெருங்குகிறார்கள். மத்தியில் நிற்கும் ராஜ்நாயக் தன் உடையிலிருந்து சுருள் கத்திகளை உருவுகிறான். இரண்டு கைகளிலும் சுருள் கத்திகளுடன் வெறித்தனமாக போர் புரிகிறான். அனைவரையும் கொன்று குவித்து வெறிக் கூச்சலிடுகிறான்.

பிணங்கள் குவியலாக கிடக்க, படிக்கட்டுகளில் ஏறுவது போல் அதிலேறி மீதமிருக்கும் எதிர்நாட்டு படைகளை ராஜ்நாயக் பார்க்கிறான். அங்கே சொற்பமான படையே மச்சமிருக்கிறது, இளவரசன் அர்ஜுனன் தீவிரமாக சிந்திக்கும் முகத்துடன் தேரில் நின்றிருக்கிறான்.

மீதமிருக்கும் எதிரிநாட்டு படைகள் ஒன்றாக சேர்ந்து தங்கள் கேடயங்களை அடுக்கி அதன் மூலம் ஒரு பாதுகாப்பு சுவரை உருவாக்கி மறைக்கிறார்கள். ராஜ்நாயக் அவர்களை நோக்கி வேகமாக நடக்கிறான். தன் கைகளை பக்கவாட்டில் காட்ட, மற்ற தளபதிகள் இருந்த இடத்திலேயே தங்கி விடுகின்றனர். ராஜ்நாயக் நடை ஓட்டமாக மாறுகிறது, முகத்தில் ஆக்ரோஷத்துடன் வேகம் எடுக்கிறான். அவனது குதிரைகள் அவனது ரதத்தை அவனருகில் இழுத்தபடி ஓடி வருகிறது, அவன் அதில் ஏறிக் கொள்கிறான் . ரதத்தை அதிவேகத்தில் விரட்டுகிறான். எதிரிநாட்டு படைகளை நெருங்கியதும் தன் வாளால் குதிரைகள் பூட்டியிருக்கும் கயிற்றை அறுக்கிறான். குதிரைகள் ஒரு பக்கம் விலகி ஓட ராஜ்நாயக்கும் எம்பி ஒரு
பக்கத்தில் குதிக்கிறான். வேகமாக வந்த ரதம் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு உருண்டோடி எதிரிப்படை மீது மோதுகிறது.

கேடய பாதுகாப்பு அமைத்து நின்ற வீரர்கள் ஆளுக்கொரு திசையில் பறக்கின்றனர். ராஜ்நாயக் எழுந்து பார்க்கிறான். அந்த பக்கத்தில் முன்பிருந்த இளவரசன் அர்ஜுனனை காணவில்லை, ராஜ்நாயக் திகைக்கிறான் .



அரண்மனை
பகல்


மிக உயரமான மாடத்தில் அரசன் நின்றிருக்க, அமைச்சர்கள் மற்றும் சில அதிகாரிகள் உடன் நிற்கின்றனர். ராஜ்நாயக் அங்கே வருகிறான். போரில் வெற்றியடைந்தசெய்தி கேட்டு அரசர் மகிழ்வுடன் ராஜ்நாயக்கை அனைத்துக் கொள்கிறார்.

மன்னர் மகிழ்ச்சியுடன் நமக்கு கீழ் எத்தனை எத்தனை வெற்றிகள், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நம் கீழான தேசங்கள், எல்லாம் உன்னால் தான் உனக்கு என்ன வேண்டும் கேள் ராஜ்நாயக்"

"கண் படாத இடத்தில் தான் இந்த ராஜ்நாயக் விருப்பமெல்லாம் மன்னா" சொல்லிவிட்டு சிரிக்கிறான் ராஜ்நாயக் அவன் பார்வை வேறு பக்கம் திரும்புகிறது அங்கே இளவரசி ரத்னமகாதேவி இரண்டு கைகளிலும் வாள் ஏந்தியபடி சில வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாள்.

ராஜ்நாயக் இளவரசியை நெருங்கி செல்கிறான், மற்றவர்களும் உடன் செல்கிறார்கள். "பூத்தொடுக்கும் கரங்களுக்கு எதற்கு வாள் பயிற்சி" ராஜ்நாயக் கூறுகிறான்.

ராஜ்நாயக் குரலை கேட்டு இளவரசி பயிற்சியை நிறுத்துகிறாள். மற்ற வீரர்கள் அவனை பணிந்து வணங்குகிறார்கள். ராஜ்நாயக் கள்ளச்சிரிப்புடன் ரத்னமகாதேவியை நோக்குகிறான். இளவரசி வெறுப்புடன் கூடிய ஒரு பார்வையுடன் அவனை பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்கிறாள்.

"ஆமாம் எதிரிநாட்டு இளவரசன் அர்ஜுனன் என்ன ஆனான்" அமைசர்களில் ஒருவர் கேட்கிறார். "கோழை.. எங்கோ தப்பி ஓடிவிட்டான்" இளவரசி மீது பார்வையை வைத்த படியே பதில் சொல்கிறான் ராஜ்நாயக் . அதை கேட்டு ரத்னமகாதேவி முகத்தில் சில மாறுதல்கள் தோன்றுகிறது. அதை ராஜ்நாயக் கவனித்து மனதுக்குள் குறித்துக் கொள்கிறான்.

நீளமான அரண்மனை படிக்கட்டுகளில் யோசித்தபடி ராஜ்நாயக் இறங்கி செல்கிறான்.



அரண்மனை
இரவு


அரண்மனையில் இருக்கும் ஒரு சாளரம் வழியே தூரத்தில் அரண்மனையின் சில பகுதிகளும் ஒரு வாயிலும் அதற்கு அப்பால் சிறு தோட்டமும் தெரிகிறது, முதலில் ஒரு தீப்பந்தத்தின் வெளிச்சம் தோன்றுகிறது அடுத்து தீப்பந்தம் ஏந்தியபடி ஒரு பணிப்பெண் வருவது தெரிகிறது. அவளுடன் முக்காடு அணிந்த படி இன்னொரு பெண் வருகிறாள், வாயிலை நெருங்கியதும் அவள் முக்காடை நீக்குகிறாள் அங்கே ஒரு வீரன் நின்றுக் கொண்டிருப்பதும் தெரிகிறது. தூரத்தில் இருந்தும் அந்தப் பெண் இளவரசி ரத்னமகாதேவி என்று தெளிவாக தெரிகிறது, பணிப்பெண் தீப்பந்தத்துடன் அங்கேயே நிற்க ரத்னமகாதேவி அந்த வீரனுடன் சென்று இருட்டில் மறைகிறாள். சாளரத்துக்கு இந்தப்பக்கத்தில் நின்று ஒருவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அரசனின் இரண்டாவது மகனும் ரத்னமகாதேவின் தம்பியுமான இளவரசன் தான் இது.



மலைப்பாதை
இரவு


சிலர் வீரர்கள் முன்னேயும் பின்னேயும் பாதுகாப்பாய் செல்ல, நடுவில் ஒரு குதிரை செல்கிறது, இளவரசன் அர்ஜுனன் அதை ஓட்டிச்செல்ல அவன் பின்னே ரத்னமகாதேவி அமர்ந்திருக்கிறாள். திடிரென அவர்கள் செல்லும் பாதை முன்பு தீப்பிடித்து எரிகிறது, அவர்கள் வழிமறிக்கப்படுகிறார்கள்..


மற்றவை திரைப்படத்தில் உள்ளது போல்...

Saturday, February 2, 2013

மணிரத்னம் டொக் ஆகிவிட்டாரா ?!



  முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன் 'கடல்' படம் சரியில்லை தான்,அதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.அப்படத்தை தூக்கி பிடிப்பதோ விமர்சிப்பதோ இப்பதிவின் நோக்கமில்லை.ஆனால் மணிரத்னம் அவ்வளவு தான், ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார் போன்ற கருத்துக்களை ஏற்றுகொள்ள முடியவில்லை.என் ஆதர்ச இயக்குனர் பற்றிய கருத்துக்களுக்கு எதிர்வினையே இப்பதிவு.

 முந்தைய படமான ராவணனும் தோல்வி இப்போது கடலும் சரியில்லை என்று சொல்பவர்கள்,மணிரத்னம் 'குரு' என்ற சர்வதேச தரத்திலான படம் எடுத்து ஐம்பது வருடங்கள் ஒன்றும் ஆகிவிடவில்லை என்பதை மறந்துவிட்டனர்.

  கடல் படத்தின் முதல் அரைமணி நேர காட்சியை பார்த்தாலே புரியும் மணிரத்னம் எனும் ஜாம்பவான் அப்படியே தான் இருக்கிறார் என்பது, பிரார்த்தனைகளை டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யவதன் மூலம் மக்களை சர்ச்சிற்கு வரவைப்பதும் பின் அந்த டேப்ரிக்கார்டர் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து பயன்படுத்தபடுவதும்,நான் பாவம் செய்துவிட்டேன் என நாயகன் சொல்ல நாயகி அவன் கைகளை தூசு தட்டுவது போல் தட்டி கேரம்போர்டில் விளையாட கற்றுக்கொள்ளும் குழந்தை ஸ்ட்ரைக்கர் பிடிக்க தெரியாமல் பிடிக்கும் உடல்மொழியுடன் அவனை பார்த்து "இப்போ எல்லாம் பாவமும் சரியா போச்சு" என்பதும் மணிரத்னம் எனும் இளமையான கதை சொல்லிக்கு மூப்பு வந்துவிடவில்லை என்பதற்கு சான்று.

  இப்படத்தில் சிறிதும் பெரிதுமான லாஜிக் ஓட்டைகள் இருந்த போதிலும் இந்த படத்தை பொறுத்தவரை சில குழப்பங்கள் உள்ளது.காதல் பாடலான "மகுடி மகுடி" டைட்டிலில் சம்பந்தமில்லாமல் பயன்படுத்தப்பட்டது ஏன்? பிரிவுத் துயரில் வரவேண்டிய "நெஞ்சுக்குள்ள" மகிழ்ச்சியான தருணத்தில் பின்னணியில் பலகீனமாய் ஒலிப்பது ஏன் ? அதுபோலவே விடை தெரியா சில  கேள்விகளும் உள்ளன, ட்ரைலரில் இடம்பெற்ற சில காட்சிகள் படத்தில் இல்லாததை கவனித்தீரா ? டீக்கடையில் பேசப்படும் "இந்த ஊர்ல மேசக்காரன்னா யாராக்கும்/சாமியாருக்கு எதுக்கு மேசக்காரன் கதை", அர்ஜுன் அரவிந்தசாமியிடம் "எந்த காயை நகர்த்தினா இந்த மாஜி பாதர மடக்கலாம்னு" போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெறவேயில்லை.இப்போது அக்காட்சிகளை பார்க்கும் பொழுது அக்காட்சிகள் இடம்பெற்றிருந்தால் படம் இன்னும் தெளிவாக புரிந்திருக்குமோ என தோன்றுகிறது.இதுபோலவே இன்னும் சில நடுவுல கொஞ்சம் காட்சிகளை காணும்...என்னாச்சி ? இந்த திரைக்கதை சொதப்பல்கள் தான் படத்தின் தோல்விக்கு காரணம்.(திரைக்கு பின் என்ன நடந்தது என புரியவில்லை.. சம்திங் இஸ் ராங் சம்வேர் )

 மற்றபடி மேகிங்க் சிறப்பாகவே உள்ளது துளிக்கூட ஏமாற்றவில்லை.கண்டபடி ஏசிவிட்டு,என் அம்மா எங்க? என கதறும் சிறுவனும், ப்பா..ப்பா.. என குழந்தையாகவே மாறிவிடும் நாயகியும் ப்யூர் மணி சார் டச்.சோரம் போய்விடவில்லை அவர்.

 சிறுவன் முதன்முதலில் கடலுக்கு செல்லும் காட்சியும்,இறுதியில் சில நிமிடங்களே வரும் இயேசுவின் ஊர்வல(டாப் ஆங்கிலில் எடுக்கப்பட்ட) காட்சியும் உலகத்தரம்.அதில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு சரிபாதி என்றாலும் மணிரத்னம் படத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி படிமங்கள் அவை,தமிழில் இன்று வரை வேறெவரும் இல்லை இந்த தரத்தில் காட்சிகளை கொண்டுவரவல்லவர்.  

  மணிரத்னம் அவர்களிடம் சொல்ல ஒன்று இருக்கிறது "உங்கள் களம் இன்னும் உயர்ந்தது,ஸ்டீர்ட் கிரிக்கெட் விளையாட(இது உண்மையில்லை என்றபோதும்)  ஆசைப்படாதீர்கள் குருவே!"

 திருடா திருடா-வில் சறுக்கியதற்கு பிறகே அவர் பம்பாய்,இருவர் எடுத்தார் என்பதும்,உயிரே-விற்கு பிறகுதான் அலைபாயுதே,குரு எடுத்திருக்கிறார் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.ஒரு ரசிகனாய் அவர் மீதான அதே அபிமானத்துடன்,நம்பிகையுடன் அவரது கம்பேக்கிற்காக காத்திருக்கிறேன்.

 மணி சாருக்கு என்றென்றும் எனது அன்பும்,வாழ்த்துகளும்.

  

Saturday, July 7, 2012

நான் ஈ - மேஜிக்





   இந்திய மொழியில் பிரம்மாண்டமா படம் எடுக்கும் போதெல்லாம் ஹாலிவுட் படம் மாதிரின்னு பில்டப் கொடுக்கறது வழக்கம்.ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுதும் பிரபலமா இருப்பதும் ரசிகர்கள் பெற்றிருப்பதும் அதற்கு காரணம்.படம் 'காட்டுவதில்'உள்ள தந்திரங்கள் எல்லாம் ஹாலிவுட் காரர்களுக்கு அத்துப்படி.

வெத்து பிரம்மாண்டம் மட்டும் சினிமா இல்லை திரைக்கதை தான் அதன் துருப்பு சீட்டு.நல்ல திரைக்கதை ப்ளஸ் பிரம்மாண்டம் தான் வெற்றி ரகசியம்.டைனோசர் கிங்காங் அனகோண்டா எல்லாம் அதனால் தான் ஜெயித்தது.பக்கா திரைக்கதை இல்லைன்னா அதெல்லாம் வெறும் சர்க்கஸ் கூத்தாகிருக்கும்.

நம்மூரில் ஹாலிவுட் மாதிரி எடுக்கறேன்னு படம் காட்டி திரைக்கதையில் கோட்டை விட்டு அல்லது காப்பி அடித்து,பிரம்மாண்ட படம் என்ற லேபிளோடு சொதப்புவது தொண்ணுத்தி எட்டு தொண்ணுத்தி ஒன்பதா நடக்கறது தான்.அப்படியில்லாமல் அசத்தல் திரைக்கதையுடன் இயக்குனர் ராஜ மௌலி திரையில் செய்திருக்கும் மேஜிக் 'நான் ஈ'.

படம் ஆரம்பிச்சு மூணு நிமிஷத்துல மூன்று முக்கிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவது.அஞ்சு நிமிஷத்துல அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை சொல்வது..பத்தாவது நிமிஷத்துல எதிர்பாராத திருப்பத்துடன் கதையை தொடங்குவது என ரெக்க படபடக்க பறக்குது ஈ.


நானி சமந்தா சுதிப்..நானிக்கு சமந்தா மீது காதல் என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்க முடியாத அளவு காதல்.விரும்பும் பெண்களை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் மயக்குபவர் சுதிப்.சுதிப்பின் கண்ணில் சமந்தா பட நானி இடைஞ்சலா வர,நானியை கொல்கிறார் சுதிப்! காதலியை காப்பாற்ற,இறந்த நானி 'நான் ஈ'ஆக மாறி சுதிப்பை பழி தீர்ப்பது  தான் படம்.

நானி இறப்பது பின் ஈயாக மறுபிறவி எடுப்பது என சில காட்சிகளில் "என்னாது இது.." என உங்களுக்குள் லாஜிக் அலாரம் அடிக்கும்,அதை அப்படியே ஆஃப் பண்ணிட்டு படத்தை பார்ப்பதை தொடர்ந்தீங்கனா கொடுத்த காசுக்கு மேலயே திருப்திப்படுத்தும் 'நான் ஈ'.

சமந்தாவையே சுற்றி வரும் நானியின் காதல் ஒரு நிறம்,வார்த்தையில் சொல்லாமல் சுற்ற விட்டு செய்கைகள் மூலம் வெளிப்படும் சமந்தாவின் நேசம் ஒரு நிறம்,ப்ளாங் எஸ்.எம்.எஸ் அனுப்புவதும் அதை புரிந்து கொள்வதும் என அவர்களுக்குள் இருக்கும் புரிதல் ஒரு நிறம் என நானி சமந்தா காதல் காட்சிகள் எல்லாம் வானவில்லின் அழகு.மௌனமே பேசும் காதலியின் கண் அசைவிற்கும் விரல் அசைவிற்கும் சரியான அர்த்தம் கண்டுக் கொள்றதும் தப்பான அர்த்தம் கற்பித்து கொள்றதும் என நானியின் பாத்திரம் வானவேடிக்கையின் அழகு.

நானி தனக்கு கிடைச்ச கொஞ்ச நேரத்தில் முடிஞ்ச அளவு ஸ்கோர் பண்றார்,என்ன குரல் தான் கொஞ்சம் படுத்துது.கன்னட சினிமாவின் பிரபல ஹீரோ சுதிப் இதில் வில்லனா நடித்திருப்பது ஆச்சர்யம்.வில்லன் பவர்ஃபுல்லா அமைஞ்சா படமும் நல்லாவே அமைஞ்சிடும் இதிலும் அப்படியே.முதல் நொடியில் இருந்து கடைசி வரை சுதிப் தான் படத்தில் அதிகம் வரார் நடிப்பில் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் போர் அடித்துவிடும் ரிஸ்க் இருக்கு,ஆனா கேரக்டரை ரஸ்கா சாப்பிட்டிருக்கார் மனிதர்.

'பிந்து'ங்கிற பேரே பிடிச்சு போயிடுது சமந்தா நடிச்சதால.கடல் படத்திலிருந்து சமந்தா நீக்கப்பட்டாரா ஐயகோ கண்ணீர் இல்லையா கம்பலை இல்லையா என இணையத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களே நடந்துது,சமந்தாவிற்கு அத்தனை ரசிகர்கள்.படத்தோட ஈர்ப்பின் மையம் சமந்தா தான் அழகோ அழகு.நடிப்பை பற்றி சொல்லணும்னா அழகோ அழகோ அழகு.

சில இடங்களில் கொஞ்சம் அதிகம் வாசித்திருப்பது போல் தெரிந்தாலும் வசனம் குறைவான படத்துக்கு மரகதமணியின் இசை பெரிய கூட்டல்.ஆங்காங்கே சாரல் போல மெலடிகளும்,"நுண்சிலை செய்திடும் பொன் சிலையே பென்சிலை சீவிடும் பெண் சிலையே என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா" என கார்கியின் வரிகளும் அட அடடடா.. ஓ ஹோ.

"ஈ டா ஈ டா ஈ டா! கண்ணு ரெண்டில் தீடா நரகம் உந்தன் வீடா மாத்திடுவேன் வா டா.." பாடலில் முரட்டு வேகம் எடுக்குது படம்,அதில் ஈ செய்யும் சாகசங்கள் எல்லாம் செம விஷுவல் ட்ரீட்.

சரியான இடத்தில் முந்தைய காட்சிகளின் க்ளிப்பிங் சேர்த்து திரைக்கதைக்கு சுவாரஸ்யம் கூட்டியிருப்பது எடிட்டரின் சாமர்த்தியம்.கேமராவும்,டீசண்டான கிராபிக்ஸ் வேலைகளும்,வசனமும் அடுத்தடுத்த கூட்டல்கள்.

பாதியில் திடிரென கயிறு போட்டு ஏறி படத்துக்குள் சந்தானம் நுழையும் போது "நல்லா தானே போய்ட்டிருக்கு"ன்னு தோணுது,நல்லவேளையா அவர் அப்படியே அப்பீட் ஆகிக்குறார்.இரண்டாம் பாதியில் ஈ கொஞ்சம் டயர்டாகி ஸ்லோ ஆகுது,பின் சுதாகரிச்சு பிக்அப் ஆகுற  திரைக்கதை பரபரத்து டச்சிங்கா ஒரு க்ளைமாக்ஸ் உடன் அடங்குது.

ஒரு மாற்று சினிமா எந்தளவு முக்கியமோ அதே அளவு நல்ல கமர்சியல் படங்களும் முக்கியம்.வலிக்காம ஊசி போட தெரிந்த டாக்டர் மாதிரி பார்வையாளன் பொறுமையை சோதிக்காம அவன் ரசனையை உயர்த்த இம்மாதிரி படங்களால் முடியும்.மனிதனை ஒரு ஈயால் என்னெல்லாம் பாடுபடுத்த முடியும்னு யோசிச்சு அதுல காதல்,ஹீரோயிஸம் எல்லாம் சேர்த்து ரசிக்கும் படியா வித்யாசமா படம் எடுக்க முடியும்னு நிரூபிச்சிருக்கும் ராஜ மௌலிக்கும் உடன் எழுதியிருக்கும் ஜனார்த்தன் மஹரிஷிக்கும் சபாஷ்.

சில குறைகள் இருக்கு அதையும் தாண்டி ரசிக்கும் படியாகவே இருக்கு படம்.குழந்தைகளுக்கு மிக பிடிக்கும் குழந்தையாய் மாறிவிடும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.இப்படம் இந்தியா முழுதும் நல்ல பெயர் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனக்கென்னமோ இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் பண்ணாலும் பண்ணுவாங்கன்னு தோணுது !

தமிழ்ல சொன்ன சரியா வருமா தெரியல,ஆங்கிலத்தில் சொல்றேன்

"ஐ லவ் திஸ் மூவி"




Friday, June 15, 2012

காக்கா ராதாகிருஷ்ணன் என் நினைவில்





தமிழின் நிகரில்லாத சிறந்த நடிகர்களில் காக்கா ராதாகிருஷ்ணனும் ஒருவர்.அவரது மறைவு செய்தி இன்றைய நாளை வருத்தமாக்க   பொதுமானதாக இருக்கிறது.


எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே இவரை திரைப்படங்களில் பார்த்து 
வந்தேன் என்ற போதும் இவரது எஸ்.டி.டி பற்றி எனக்கு அதிகம் தெரியாது.கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடிப்பவர் என்பதும் தொடக்கத்தில் நாயகனாகவும் பின்பு துணை நாயகன் வேடங்களில்,முக்கிய வேடங்களில் நடித்தவர் என்பதும் நாடக பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதுமே இன்று வரை இவரை பற்றி எனக்கு தெரிந்த சொர்ப்ப தகவல்.


 பள்ளி நாட்களில் பார்த்த "காதலுக்கு மரியாதை" திரைப்படமே இவரை பற்றிய முதல் நினைவாகவும் அவரின் ரசிகனாக மாறிய கணமாகவும் என்னில் பதிந்துள்ளது.அப்படத்தில் தான் நடிகர் விஜய் முதலும் கடைசியுமாய் எம்.பி.ஏ படித்தார்.தாமு சித்தப்பாவும் சார்லி பெரியப்பாவும் படத்தில் அவரது நண்பர்கள்.கதைப்படி அவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் பாத்திரம் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு.மனைவியை இழந்து மனநிலை பாதிக்கப்பட்டு துப்பாக்கியுடன் அலையும் பாத்திரத்தில் அனாயாசமாய் பொருந்தி இருப்பார்.அவரை பற்றி தெரியாது அவ்வீட்டிற்கு வரும் சிவக்குமார் அவரை மதிக்காது கடந்து செல்கையில் துப்பாக்கி காட்டி மிரட்டும் நடிப்பும்,அக் காட்சியின் முடிவில் துள்ளும் நாய்க்குட்டியை கைகளுக்குள் அடக்குவது போல் துப்பாக்கியை கைகளில் மறைத்து தலையை ஆட்டி போக சொல்லும் பாங்கும்,அந்த நொடியில் நாவை உதடால் கடித்து கண்கள் விரிய தரும் ஒரு எக்ஸ்பிரசனும் எல்லாம் கண்களின் ஸ்க்ரீன் சேவரில் தங்கிவிட்ட காட்சிகளில் ஒன்று.அதை போலவே ஷாலினியின் அண்ணன் அன்ட் குருப் விஜய் அன்ட் குருப்பை அடிக்கையில் துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்டிவிட்டு "ரொம்ப அடிச்சிட்டான்களா.." என மறுகுவதும் சட்டென முகம் மாறி "நான் சுட்டா கூட என்னை ஜெயில்ல போட முடியாதே ஏன்னா நான் தான் பைத்தியம் ஆச்சே...." என முடிப்பதும் அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த சாமர்த்தியம்.


என் நினைவில் ஆரம்பம் முதலே முதியவராகவே பதிந்த விட்டவரை அதன் பின் வியட்நாம் காலனி,உன்னுடன் போன்ற படங்களில் கூட மனநிலை சரியில்லாத பாத்திரத்திலேயே தொடரவைத்தது தமிழ் சினிமாவின் க்ளிஷே.இடையில் மனம் விரும்புதே உன்னை படத்தில் நாயகியின் ஜொள்ளு தாத்தாவாக வந்து ரகளை செய்திருப்பார்.மேலும் சில படங்களில் செட் ப்ராபர்டியாகவும் கடந்து சென்றதாக ஞாபகம்.


இவரை நினைத்ததும் நினைவுக்கு வரும் இன்னொரு படம் "தேவர் மகன்".நடிகர் திலகம் சிவாஜியின் அண்ணன் பாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டது கூட இவரின் நடிப்பை கௌரவ படுத்துவதற்காக இருக்குமோ என்று கூட பின்னாட்களில் யோசித்திருக்கிறேன்.அப்படத்தை டிவியில் பார்த்து இவருக்கு உண்மையாகவே  பக்கவாதம் வந்து கை கால்கள் செயல்படாது போய்விட்டது போலும் எனவும் பின் அவர் நடித்த மற்ற படங்களை பார்க்கையில அவ்வியாதியில் இருந்து மீண்டுவிட்டார் போலும் எனவும் குழப்பி கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது .அத்தனை தத்துரபமான ஒரு நடிப்பை தந்திருப்பார்.


வியட்நாம் காலனி படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருப்பார் எனினும் படம்முடிந்து வீட்டிற்கு செல்லும் வரை நினைத்து நினைத்து சிரிக்கும் படி இவரது நடிப்பால் பதிந்து போயிருக்கும் அக்காட்சி.இவ்வாறு ஒரு படத்தில் ஒரு சில காட்சிகள் வந்த போதும் மறக்க முடியாது நினைவில் பதிந்துவிடும் ஆளுமை மிக்கவர்.எனினும் அவரது அந்திம காலத்தில் அந்த ஒரு சில காட்சிகளில் ஆவது அவரை இன்னும் நிறைய பயன்படுத்திக் கொள்ளாதது தமிழ் சினிமாவின் இழப்பே.


வசூல்ராஜா படத்தில் கட்டிலில் இருந்து தள்ளாடிய படி எழுந்து வந்து கேரம் ஆடும் காட்சி இவரது நடிப்பாற்றலுக்கு ஒரு சோறு பதம்.பல மொழிகளில் பிரதி எடுக்கப்பட்ட அப்டத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தை மற்ற மொழிகளில் எவரும் இவர் போல் சிறப்பாய் செய்திருக்கவில்லை என்பது அக்காட்சியின் பிரதிகளை பார்த்தால் புரியும்.அக்காட்சியில் கண்களை உருட்டி விழித்து ரெட்டிற்கு பாலோ போட எத்தனிக்கும் இவரது முனைப்பை பார்த்து கமல் "யப்பா..." என பிரமிப்பது நடிப்பல்ல நிஜம்.


நடிகனை காமடியன்,ஹீரோ என முத்திரை குத்தி பிரித்து வைக்கும் தமிழ் சினிமாவின் மூடத்தனம் இவருக்கும் ஒரு முத்திரை இட்டு சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.இவரை பற்றி அதிகம் தெரியாது என்னை போன்ற அறியாமை ரசிகர்களுக்கும் இவரை நன்கு அறிந்த ரசிகர்களுக்கும் இவரது நடிப்பின் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தும் படியான கதாபாத்திரத்தை தமிழ் சினிமா அமைத்து தராதது ஏமாற்றமே.

தலைமுறைகள் தாண்டி ரசிக்க வைத்த இவரது நடிப்பு அவரின் மரணத்தை தாண்டியும் என்றும் நிலைத்தேயிருக்கும்.




Saturday, May 5, 2012

வழக்கு எண் 18/9 - நிகழ்ந்துவிட்ட அற்புதம்





  செய்திதாள்களில் பத்தோடு பதினொன்றாய்,பெட்டி செய்தியாய் எத்தனையோ குற்றங்களை வெறும் வாசகங்களாக வாசித்து விட்டு கடந்து விடுகிறோம்.இன்னார் பாதிக்கப்பட்டவர் இன்னார் குற்றவாளி என செய்திகள் சொல்லும் முடிவினை ஏற்று 'லோகத்துல என்னலாமோ நடக்கிறது..'' என சொல்லிக் கொண்டு 'எல்லாம் கலிகாலம்' என்ற ஒற்றை வார்த்தையில் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிடுகிறோம் .உண்மையில் உண்மை என்ன என்பதை அறிய அக்குற்றங்களை ஆராய்ந்தால் உண்மை என்னவாய் இருக்கும்? உண்மைக்கு ஒரு குணமுண்டு அது வலிமிகுந்ததாய்,நம்ப முடியாததாய், முகத்தில் அறைவதாய் இருக்கும்.அப்படி ஒரு குற்றத்திற்கு பின்னான உண்மையை முகத்தில் அறைந்தார் போல் சொல்லும் படம் "வழக்கு எண் 18/9"

 ஜோதி என்ற பெண் யாரோ ஒருவரால் முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்,போலிஸ் விசாரணை தொடங்குகிறது.. அதை செய்தது யார்? ஏன் செய்தார்? அவருக்கு தண்டனை கிடைத்ததா? என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.பதின்வயதை சேர்ந்த வேலு,ஜோதி மற்றும் தினேஷ்,ஆர்த்தி ஆகியோர்களின் இடையே நடக்கும் சம்பவங்களாக விரிகிறது திரைக்கதை.

 நான் சற்று தாமதமாகத்தான் படத்திற்கு சென்றேன்.அரங்கினுள் செல்கையில் டாக்குமென்டரி போல் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருந்தது நியூஸ் ரீலோ என்று கூட சந்தேகிக்க தோன்றியது ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரே சிறுவன்,குடும்ப கடனை அடைக்க தூர தேசத்திற்கு கொத்தடிமையாய் செல்வதை விவரிக்கும் காட்சிகள் அது.அதன் பின் அவன் சென்னையின் ஒரு தெருவில் தனக்கென ஒரு வாழ்வை தேடிக் கொள்வதை சொல்லும் அடுத்த பகுதி வேறு பாணியில் எடுக்கபட்டிருக்கிறது.திரைப்படத்தின் எந்த இலக்கணத்தையும் பின்பற்றாத இலக்கணமாக டிஜிட்டல் கேமராவின் சாத்தியங்களை பயன்படுத்தி தெருவில் நடப்பதை வேடிக்கை பார்ப்பது போல் நம்மை உணரச்செய்கிறது இப்பகுதி.ப்ளாட்களில் வசிக்கும் அப்பர் மிடில்கிளாஸ் மக்களின் வாழ்வை சொல்லும் பகுதி அழகியளுடனும்,நேர்த்தியுடனும் கையாளப்பட்டிருக்கிறது.முடிவில் சாதாரணத்திலிருந்து சிறிது சிறிதாக விரிந்து தன் விஸ்வரூபத்தை காட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது  இயக்குனர் திரு.பாலாஜி சக்திவேல் மற்றும் அவரது குழுவினர் இப்படைப்பு.

 வழக்கமான எந்த தமிழ் சினிமாவின் பாணியிலும் இல்லாமல் இப்படத்தின் திரைக்கதை மெல்ல மெல்ல மண்ணை துளைக்கும் மண்புழுவினை போல் மெதுவாக பயணிக்கிறது கிட்டத்தட்ட இரண்டாம் பாதியின் கால்வாசி வரை.பின் ஆழமில்லை என நினைத்து நடக்கையில் திடிரென எதிர்ப்படும் ஆழத்தில் முழுதும் நம்மை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றினை போல் சட்டென ஒரு சமயத்தில் நம்மை  முழுதும் உள்வாங்கிக் கொள்கிறது இப்படம்.அதன்பிறகு ஒரு மகா கலைஞனின் ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஒரு பார்வையாளனை என்ன செய்யுமோ அதை சரியாய் செய்கிறது.

 ஆரம்பத்தில் மிக மேலோட்டமாகவும் சாதரணமாகவும் தெரிந்தாலும் இத் திரைப்படத்திற்கு(திரைக்கதைக்கும்) பின்னால் இருக்கும் உழைப்பு அத்தனை சாதாரணமானதல்ல.கண்களை திறந்த தியானம் செய்யும் ஞானியின் பார்வையை ஊடுருவது போல் சலனமற்ற ஆழத்தை கொண்ட படமிது.மீண்டும் மீண்டும் இத்திரைப்படத்தை பார்த்தால் மட்டுமே அதை முழுதும் உணர முடியும் .

 பிரசன்னாவின் பின்னணி இசை அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் இசைந்து நாம் அறியாது உணர்வுகள் மூலம் நம் நெஞ்சை பிசைகிறது.இப்படி தான் எடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்காமல் விஜய்மில்டனும் தான் ஒரு பிரபல ஒளிப்பதிவாளன் என்பதை மறந்து கதையின் போக்கிற்க்கு ஏற்றவாறு கேமிராவை சுமந்து அலைந்திருக்கிறார்.இவர்களுடன் படத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணன் மற்றும் அசலாய் வாழ்ந்திருக்கும் நடிகர்களும் சேர்ந்து இதை ஒரு அற்புத படைப்பாக ஆக்கியிருக்கிறார்கள்.

 ஆர்த்தியாக நடித்திருக்கும் மனிஷா அபாரமான நடிப்பினால் அசரடிக்கிறார்.தினேஷாக நடித்திருக்கும் மிதுன் முரளி அழகான பொறுக்கியை சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் மூலம் அப்பட்டமாக கண் முன் நிறுத்துகிறார்.மற்ற பிரதான பாத்திரமாக வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீ யும் அவனது நண்பனாக வரும் சிறுவனும் துளிக் கூட நடிக்காமல் நிஜங்களாகவே தெரிகிறார்கள்.இன்ஸ்பெக்டராக வருபவர் எங்காவது நடிப்பார் என பார்த்து ஏமாந்து போனேன்,ஒருவேளை நிஜ இன்ஸ்பெக்டராக இருப்பாரோ என இன்னும் சந்தேகித்து கொண்டே இருக்கிறேன் அத்தனை பொருத்தம்.

 அதை போலவே ஆர்த்தியின் பள்ளித்தோழியாக வரும் ஸ்வேதாவின் நடிப்பு அப்பப்பா.. மேலும் ஜோதியின் தாய்,ஆர்த்தியின் பெற்றோர்கள்,இட்லிக் கடைக்காரர்,சில நிமிடமே வந்து போகும் வார்ட்பாய் உட்பட இன்னும் பலரின் செயற்கை முகைமூடி அணியா அசல் நடிப்பினை பற்றி சொல்லி சொல்லி மாய்ந்து போகலாம்.

 ஜோதியாக நடிதிருக்கும் ஊர்மிளா பூனே பிலிம் இன்ஸ்டியூட் மாணவியாம் கோல்ட் மேடலிஸ்ட் வேறு.மறைந்த நடிகை ஷோபாவை நினைவுபடுத்துகிறார்.ஷோபாவின் இடம் இன்னும் காலியாக தான்  இருக்கிறது அதை இவர் நிரப்பக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகிறது.ரௌத்திரதையும்,கம்பீரத்தையும்,அன்பையும் வார்த்தைகள் இன்றி பார்வையாலேயே அழுத்தமாய் வெளிப்படுத்தி படம் முடிகையில் ஒரு தேவதையாய் நம் நெஞ்சில் நிறைகிறார் .

 சாமுராய் படத்தில் ஒரு காட்சி வரும் படத்தின் நாயகியை சிலர் பலாத்காரம் செய்ய முயற்சிப்பார்கள் எங்கே அவள் தோற்றுவிடுவாளோ என நாம் பதறும் வேளையில் அவள் அருள் வந்தவள் போல் வெறிகொண்டு அவர்கள் உதைத்து தள்ளி தப்பிப்பாள் அதை பார்த்ததில் இருந்து நான் பாலாஜி சக்திவேலின் ரசிகன் ஆனேன்.பெண்களை வீரத்துடனும்,அன்புடனும் திரையில் உலவவிடுவது பாலாஜி சக்திவேலின் வழக்கம்.அதுபோலவே இது எதார்த்தமான படம்,நிஜம் எதிர்மறையாக தான் இருக்கும் என முடிக்காமல் அந்த முடிவின் மீது வேறொரு முடிவை எழுதி அன்பையும்,நம்பிக்கையும் பேசும் பாலாஜி சக்திவேலின் கொள்கையை நான் மதிக்கிறேன்.

 இப்படமும் முடியும் தருவாயில் சொல்ல முடியா சோகத்தையும் உண்மையின் வலிமை மீதான நிறைய நம்பிக்கையையும் தொண்டை அடைக்க கண்கள் முட்ட ஒரு காதலின் கதையும் சொல்லி விழிகளில் நீரை நிறைக்கிறது.

 பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படமிது. இது இத்தனை சிறப்பாய் வந்ததற்கு மிக முக்கிய காரணமான படத்தின் தயாரிப்பாளர் திரு.லிங்குசாமிக்கு தமிழ்திரைஉலகம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.

மொழி,நாடு எல்லைகளை கடந்து உலகமெல்லாம் உள்ள திரை ரசிகர்களால் பார்த்து பாராட்டப்படக்கூடிய ஒரு தமிழ்படத்தை தந்தற்கு பாலாஜி சக்திவேலிற்கும் அவர் குழுவினர்க்கும் லிங்குசாமிக்கும் என் நன்றிகளை வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


 திரைப்படங்கள் எப்போது வேண்டுமானாலும் வரும் ஆனால் அற்புதங்கள் எப்போதாவது தான் நிகழும்.அப்படி நம் கண் முன்னே நிகழ்ந்துவிட்ட அற்புதம் இந்த படம்.



Sunday, March 4, 2012

அரவான் - எதற்காக பார்க்க வேண்டும்?




முதலிலேயே சொல்லி விடுகிறேன் அரவான் திரைப்படம் ஆஹா ஓஹோவென இல்லை தான் எனினும் படம் மோசமில்லை என்பேன்.இப்படம் ஒரு நல்ல முயற்சி என தாரளமாக கூறலாம்.

 இணையத்திலும் டிவிட்டரிலும் இப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் உலாவி வரும் வேளையில் இம்மாதிரியான முயற்சிகளுக்கு வலிந்து ஆதரவு திரட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது.

 எத்தனையோ ஹீரோயிச அபத்தங்கள் நிறைந்த படங்களை கைதட்டி ரசித்து பார்க்கும் கூட்டம் அரவான் போன்ற படங்களை மட்டும் பூதக் கண்ணாடிக் கொண்டு பார்த்து,வேண்டுமென்றே குறை சொல்வது வேடிக்கையாய் இருக்கிறது.

 பத்தோடு பதினொன்றாக பார்த்தால் அரவான் ஒரு நல்ல தமிழ் படம் என்றே 
சொல்லிவிடலாம்,எனினும் எடுத்துக் கொண்ட களம் சொல்ல வந்த கதை அதை சொல்லிய முறை என்று ஆராய்தால் இப்படம் முழு நிறைவு தரக்கூடிய படைப்பாக வரவில்லை தான்.

 ஏனைய தமிழ் படங்கள் எல்லாம் என்னவோ நேரடியாக கேன்ஸ் பட விழாவில் 
திரையிடப்படுவது போன்றும்,பார்வையாளனுக்கு முழு கலாபூர்வ அனுபவம் தரக்குடியதாக இருப்பது போன்றும் இப்படம் மட்டும் அதிலிருந்து நழுவி தமிழ் 
சினிமாவிற்கு திருஷ்டி பரிகாரமாக அமைந்து விட்டதாக எண்ணக்கூடிய வண்ணம் வரும் விமர்சனங்களை தான் ஏற்க முடியவில்லை.



 இத்தகைய சூழ்நிலையில் அரவான் போன்ற படங்களை நாம் எதற்காக பார்க்க 
வேண்டும் என்று புரிந்து கொள்வது அவசியமாகபடுகிறது,அக்காரணங்களை 
பாப்போம்...

 முதலில் இன்றைக்கு 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர் மற்றும் சிறுவர்களிடம் சென்று நம் வரலாற்றை பற்றி சொல்லுமாறு கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்வது இப்படி தான் இருக்கும் 
           
          "காந்தி தாத்தா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார்,நேரு இந்தியாவின் முதல் பிரதமர்!! ஷாஜகான் தாஜ் மஹாலை கட்டினார்,கஜினி முகமது இந்தியா மீது 17முறை படை எடுத்தார்,வள வள வள...."

(ஞே...இது இந்திய வரலாறு ஆச்சே)அட நம்ம தமிழர் வரலாறு பத்தி சொல்லுப்பா ?

          "ஆங்..ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டினார்,கரிகால் 
சோழன் கல்லணையை கட்டினார்,தமிழ் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு காகம் வந்து.......!!"

 மெக்காலே கல்விமுறை ஐந்து மதிப்பெண் பெற கற்று கொடுத்தது இது மட்டும் தான்.இம் மண்ணை சேர்ந்த நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் என்ற சிறிய அறிவு கூட பல இளைஞர்களுக்கு இருக்காது என்பதே என் துணிபு(அதில் நானும் ஒருவன் என்பதால்)

 குறைந்தது அரவான் பார்க்கும எழுபத்தி ஐந்து சதவிதத்தினருக்கேனும் இப்படி களவு செய்வதே பிழைப்பாக கொண்ட மக்களும்,காவல் காக்க ஒரு கூட்டமும் மீறி களவாடி சென்று விட்டால் அதற்கு இடாக பொருள் தந்து களவு போன பொருளை மீட்டு வருதலும் நம் மண்ணில் வழக்கமாக இருந்தது என்பதே புதிய தகவலாக இருக்கும் என்பதும் என் துணிபு.

 இம்மாதிரி படங்கள் மட்டுமே நம் முப்பாட்டன்கள் வாழ்ந்த கால கட்டத்தின் சூழலை அறிமுகம் செய்து அதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டவல்லது.ட்வென்டி ட்வென்டி,ஐபில் என நேரத்தை வீணடிக்கும் பெரும்பான்மையானவர்களை படிக்க வைப்பதெல்லாம் எளிதான காரியம் இல்லை அவர்களின் கவனத்தை இப்படி பட்ட படங்களின் மூலம் தான் கவர முடியும்.

 தண்ணீர் பஞ்சம்,உணவு பஞ்சம் போல் தமிழ் சினிமாவில் கதை பஞ்சம் என 
அவ்வப்போது கதை விடப்படும்.இந்தியிலிருந்து ரீமேக்,தெலுங்கிலிருந்து ரீமேக் என கூவி படங்களை தொடர்ந்து நம் தலையில் கட்டி பர்ஸை காலி செய்கிறார்கள் அப்படி என்ன தமிழ்நாட்டில் இல்லாத கதை என பார்த்தால் அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் கதையாக இருந்து தொலைக்கும்.நம்மூரில் என்ன 
எழுத்தாளர்களுக்கு பஞ்சமா,கதைகளுக்கும் நாவல்களுக்கும் தான் பஞ்சமா ஆனால் அதெல்லாம் எடுக்க முடியாது என சாமி மீது சத்தியம் செய்து ஒரு கூட்டம் அலைகிறது,மீறி வருவதோ "உளியின் ஓசை" போல் இருந்து பயமுறுத்துகிறது இவ்வேளையில் அரவான் போன்ற படத்தின் வெற்றி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தும்.இம்முயற்சி பாதி வெற்றியே பெற்றிருந்தாலும் அடுத்து ஒரு நல்ல நாவல் நல்ல தமிழ்படமாக வருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும்.

 அட எந்த ஹாலிவுட் படத்திலிருந்தும் காப்பி அடிக்காமல் இருந்ததற்கே பாராட்டலாமே.

 உலக நாயகன் மருதநாயகம் எடுக்கிறேன்,மர்ம யோகி எடுக்கிறேன் என சொல்லிக்கொண்டே இருக்கிறார் தவிர முடிந்த பாடில்லை,மணிரத்னம் அவர்கள் "பொன்னியின் செல்வன்" எடுப்பதாக அறிவித்து அதோடு நிறுத்தியும் விட்டார்.இப்படி பட்ட பிரபல படைப்பாளிகளுக்கே வரலாற்று படங்கள் எடுப்பது சவாலாக இருக்கும் சூழலில் அதிக அனுபவமில்லாத தனக்கென ஒரு மார்கெட் வேல்யூ இல்லாத வசந்தபாலன் போன்றவர் இப்படத்தை இந்த அளவிற்கேனும் எடுத்து வெளியிட்டதற்கே ஆர தழுவி பாராட்ட வேண்டும்.

 மிக எளிதாக அதிக பட்ஜெட்,பெரிய தொழில்நுட்ப கூட்டணி கிடைக்க வாய்ப்புள்ள ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர் இத்தகைய கதையை எடுக்க துணிவாரா ? இந்தியன் தாத்தாவை திரையில் காட்டியவர் தமிழ் முப்பாட்டனை காட்டுவாரா?

  எந்த பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும்,நடிகர்களும் துணைக்கு இல்லாமல் 
இம்மாதிரி படத்தை எடுத்து முடித்த வசந்த பாலனும் இதை தயாரித்த அம்மா 
கிரியேசனும் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள்.

 இப்போது வழக்கமாக படத்தில் வரும் ஹிரோக்களுக்கு என்ன வேலை தெரியுமா ? ஒரு வேலையும் கிடையாது,ஊருக்கு நேந்துவிட்ட பிள்ளையாக சுற்றிக் கொண்டே இருப்பது தான்.ஏனெனில் அப்போது தான் கதாநாயகி தடுக்கி விழும் போது இடுப்பில் கை கொடுத்து தாங்கி பிடிக்க முடியும்,பஞ்ச் டயலாக் அடித்து பறந்து பறந்து சண்டை போட முடியும்.

 ஆனால் அரவான் அப்படியல்ல,இப்படத்தின் நாயகனாக வரும் வரிப்புலி என்கிற சின்னா என்னும் கதாபாத்திரம் நம் மண்ணில் ரத்தமும் சதையுமாய் என்றோ வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் பதிவு.அவனது வாழ்க்கை சரியாய் பதிவு செய்யப் படவில்லை என்றாலும் இது போன்று வாழ்ந்து மறைந்த நம் தாத்தாவின் தாத்தாவை பற்றி எப்போது தெரிந்து கொள்ள போகிறோம். 

 எத்தனை நாளைக்கு தான் பெருமாளின் பெருமையையும்,சிவினின் திருவிளையாடலையும் மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பது.ஊருக்கு வெளியே காவல் தெய்வமாக குல சாமியாக ஆற்றங்கரையில் நடுக்கற்களாக நிற்பவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டாமா.

 வேலாயுதத்தை வெற்றி பெற செய்த நாம்,f**king gameயை சூப்பர் ஹிட் ஆக்கிய 
நாம் அரவான் போன்ற படங்களை வெற்றி பெற செய்வதால் என்ன குறைந்து விட போகிறோம் ?

 அரவான் யார்? இதே மண்ணின் காடு,மலை,மண்,புழுதியுடன் வாழ்ந்து வீரத்திற்காக மானத்திற்காக ஊருக்காக மக்களுக்காக உயிர் தியாகம் செய்து பின் அதே மக்களின் கடவுளாக காவல் தெய்வமாக மாறி போன எண்ணற்றவர்களின் ஒருவன்.இந்த படத்தின் வெற்றி நாம் மறந்து விட்ட பல வரலாற்றின் பக்கங்களை பல நல்ல முயற்சிகளை திரைப்படங்களாக்கும் என்ற நம்பிக்கையுடன்...

 அரவானை வரவேற்போம்.


    

Monday, January 9, 2012

காலக் கிறுக்கல்




இந்த நொடி
உடைந்து கொண்டே
போகிறது
கடந்த நொடியை போல

எதிர் வரும்
நொடியும்
கூட
உடைந்தே போகும்

இல்லாத காலம்
இருந்து கொண்டே
இருக்கிறது
எப்போதும்...

-புதிய பேனா
 வாங்கியதற்காக
 கிறுக்கிப் பார்த்ததில்
 எங்கிருந்து
 எப்படி வந்தன
 இந்த வரிகள் எல்லாம்

இந்த நொடியும்
உடைந்து கொண்டே போகிறது
வேறோர் கேள்வியுடன்..

இத்தனை நாள்
இவ்வரிகள் எல்லாம்
இப்பேனா மையில்
மறைந்து இருந்தனவா ?